“இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர்” - அமைச்சர் உதயநிதி பரப்புரை!
இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர் என சத்தியமங்கலம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி தேர்தல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நீலகிரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
“இந்த முறை 40க்கு 40 ஜெயிக்கப்போவது உறுதி. என்னுடைய அரசியல் ஆசான் ஆ.ராசா. அதைவிட மக்களுடைய பேராதரவை பெற்றவர் ஆ.ராசா. இங்கிருக்கும் கூட்டத்தை பார்த்தால் தேர்தலே முடிந்த மாதிரி தெரிகிறது. இன்னும் மூன்று நாட்களே தேர்தலுக்கு உள்ளது. இதே எழுச்சியோடு நீங்கள் வாக்களித்து ஆ ராசாவை வெற்றி பெறச்செய்ய வேண்டும். குறைந்தது மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் வாங்க கூடாது. அதுவே எமது இலக்கு.
ஆ.ராசாவை பல ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி என்ற பொய் வழக்கை போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் அவரே வாதாடி தான் நிரபராதி என நிரூபித்து வந்துள்ளார். ரூ.13 கோடி செலவில் தாளவாடியில் அரசு கலைக்கல்லூரியை கொண்டுவர முக்கிய காரணமாக இருந்தவர். இவருடைய தீவிர முயற்சியால் மலைவாழ் மக்களுக்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு 10 கேஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயாக இருந்தது. இப்போது கேஸ் சிலிண்டர் விலை ரூ.1200. ரூ.900 பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒரு கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக கொடுக்கப்படும். பெட்ரோல் விலை 10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி இப்போது ரூ.120 உயர்த்தி உள்ளது மோடி அரசு. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கு கொடுக்கப்படும். ஒரு லிட்டர் டீசல் 65 ரூபாய்க்கு கொடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.
ஒன்றாம் நம்பர் பட்டனை அமுக்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். அதுதான் நீங்க போடப்போற ஓட்டு. மோடிக்கு வைக்க போற வேட்டு. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை கொடுத்தது, 465 கோடி பயணங்களை மேற்கொண்டது தான் திமுக அரசின் வெற்றி. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் அவருடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் 11 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது காலை உணவு திட்டம். பசியோடு வரும் குழந்தைகளுக்கு அன்னமிட்டு அவர்களின் படிப்பை ஊக்குவிக்க முதலமைச்சர் அயராது பாடுபட்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் 56 ஆயிரம் குழந்தைகள் இந்த இலவச உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். கலைஞர் மகளிர் உதவி தொகை மூலம் ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
நாம் கட்டும் ஒரு ரூபாய்க்கு மத்திய அரசு வெறும் 29 பைசாவை மட்டுமே திருப்பிக் கொடுக்கிறது. கடந்த முறை ‘கோ பேக் மோடி’ என்று சொன்னோம். இந்த முறை ‘கெட் அவுட் மோடி’ என்று சொல்ல வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு வேண்டாம் என தமிழக அரசு கூறினால், அது கண்டிப்பாக நுழைக்க மாட்டோம் என ராகுல் காந்தி வாக்குறுதி கொடுத்துள்ளார்.
சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர் தான் இந்த தேர்தல். பாஜக ஆளுகின்ற ஆறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி விட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரே ஒரு செங்கலை மட்டும் கொடுத்துள்ளார்கள். இதற்கெல்லாம் பிரதமர் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும்”
என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.