"மத்திய அரசு திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஓட்டுகிறது" - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி!
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து பகுதியில் மதுரை தேனி செல்லும் சாலையில் உள்ள மந்தை திடலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மேற்கூரை அமைக்கும் விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக அங்குள்ள சந்தன மாரியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை செய்த பின்பு மேற்கூரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு,
"அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்திற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பாஜக, அதிமுக கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொது செயலாளரிடம் கேளுங்கள். கூட்டணி குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாமல். அமித்ஷா-விடம் பேசியதும், கூட்டணி குறித்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக பேசியுள்ளார்.
ஒரு முன்னாள் அமைச்சரை தரக்குறைவாகவும், அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதலமைச்சர் பேசியிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை, இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொதுவிழாவில் ஒரு முதல்வர் பேசியது வன்மையாக கண்டிக்கக்கூடியது. மேலும் தமிழக மக்கள் இளைஞரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.
இந்தப் போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும் மக்கள் செல்வாக்கும் இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார். மதுரையே அழகாக காட்சியளிக்க காரணம் அதிமுகவின் பல்வேறு திட்டங்களும், 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ததால் தான். அரசர் காலத்திற்குப் பிறகு அம்மாவின் ஆட்சியில் எடப்பாடி கொடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார். அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வளர்ப்பது குறித்து நாங்கள் கவலைப்படுவதே இல்லை.
மக்களுக்கு தெரியும் அதிமுக ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும். மேலும் மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் திமுக அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.