‘இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு?
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் நான்கு ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
இதற்கிடையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரை பரிந்துரை செய்தார். இதனால் நிதிஷ் குமார் தனது அதிருப்தியை டெல்லியில் காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் நடந்து முடிந்த ‛இந்தியா' கூட்டணியில் வெளிக்காட்டினார். நிதிஷ் குமார் ஹிந்தியில் பேசியதை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி டிஆர்.பாலுவுக்கு புரியவில்லை. இதையடுத்து நிதிஷ் குமாரின் கட்சியை சேர்ந்த எம்பியை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய டிஆர் பாலு கூறினார். இதற்கு நிதிஷ் குமார் கடிந்து கொண்டார். ஹிந்தி கற்று கொள்ள வேண்டும் என காட்டமாக தெரிவித்தார். இது விவாதத்தை கிளப்பியது.
இதனால் ‛இந்தியா' கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் வழங்காத பட்சத்தில் அவர் மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்கலாம் என்ற தகவல் பரவ தொடங்கியது. இந்நிலையில் நிதிஷ் குமாருக்கு தற்போது ‛இந்தியா' கூட்டணியில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை நிதிஷ் குமாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக பிற எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் வகையில் இந்த வாரமே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவுடன் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மகராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான சிவசேனா (உத்தவ் அணி) தவைர் உத்தவ் தாக்கரேவிடம் நிதிஷ்குமார் நேற்று பேசியுள்ளதாகவும், அதோடு நிதிஷ் குமாரை ஒருங்கிணைப்பாளராக்கும் முடிவுக்கு ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.