“வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் பிரதமர் நரேந்திர மோடி தோற்றிருப்பார்!” - ராகுல் காந்தி
வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் பிரதமர் நரேந்திர மோடி அவரின் சொந்த தொகுதியிலேயே தோற்றிருப்பார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக அத்தொகுதி மக்களை ராகுல் காந்தி சந்தித்தார். ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், அயோத்தி உள்ள ஃபைசாபூர் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது. அயோத்தியில் மட்டுமல்ல, எனது சகோதரி பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால், அங்கு நாட்டின் பிரதமர் மோடி 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல் அடைந்திருப்பார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை குறைக்கும் வகையில், ரேபரேலி, அமேதி மட்டுமின்றி நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாகத் தேர்தலை சந்தித்தனர். பிரதமர் மோடி மக்களின் குறைகளை காதுகொடுத்து கேட்பதை புறக்கணிக்கிறார். ஆனால், தொழிலதிபர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார். அயோத்தியில் பாஜகவின் தோல்வியை பரிசாக அளித்து தக்க பாடத்தை மக்கள் புகட்டியுள்ளனர் எனப் பேசினார்.