பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைப்பாரா நிதீஷ் குமார்?
பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஜனவரி இறுதியில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 28-ம் தேதி பீகாரில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. 9வது முறையாக நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவி ஏற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த சூழலில், பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பல்வேறு திருப்பங்களால், ஆளும் பாஜக கூட்டணி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக 78, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 4, ஒரு சுயேச்சை எம்எல்ஏ என பாஜக கூட்டணி அரசுக்கு 128 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.
 நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களின் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் 45 எம்எல்ஏக்களில் பிமா பார்தி, சஞ்சீவ் சிங், திலீப் ராய், சுதர்சன் ஆகிய 4 எம்எல்ஏக்கள் வரவில்லை எனவும், அவர்கள் தங்களது செல்போன்களையும் அணைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களின் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் 45 எம்எல்ஏக்களில் பிமா பார்தி, சஞ்சீவ் சிங், திலீப் ராய், சுதர்சன் ஆகிய 4 எம்எல்ஏக்கள் வரவில்லை எனவும், அவர்கள் தங்களது செல்போன்களையும் அணைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜக எம்எல்ஏக்கள் பீகாரின் கயா நகரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த கட்சியின் 78 எம்எல்ஏக்களில் 3 பேர் ஓட்டலுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பீகார் துணை முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் சவுத்ரி கூறும்போது, “3 எம்எல்ஏக்கள் கயா ஓட்டலுக்கு வரவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் கூறிவிட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
 
  
  
  
  
  
 