"யார் அந்த தலைமைச் செயலக அதிகாரி? அவருடைய பெயரை வெளியிட வேண்டும்" - நயினார் நாகேந்திரன் பேட்டி
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
"FIR கூட போடாமல் 27 வயது இளைஞரை 6 காவலர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். அவரின் உடம்பில் சிகரெட்டால் சுட்டுள்ளனர். அஜித்குமாரின் மூளை, இதயத்தில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து தகவல் கொடுத்தது யார்? இன்று வெளியான போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் ஏற்கனவே இவருக்கு இதயம் பாதிக்கப்பட்டதென்று சொல்லிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கொடூரமான செயல் இது? அவரின் உடலில் இருந்த காயங்கள் எல்லாம் இரண்டு நாளைக்கு முன்னாடியே காயம் இருக்கிறது அப்படியென்று சொல்லி இருக்கிறார்கள். இதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே தூக்கிக்கொண்டு போய் அடித்திருக்கிறார்கள். இதனை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவருடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. எங்குப் பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள். இதே மாவட்டத்தில் உள்ள சிங்கப்புனரியில் பள்ளிக்குச் சென்ற 7 வயது சிறுவன் இறந்துவிட்டார். அவரின் உடலில் காயங்கள் இருக்கிறது.
எப்படி இவ்வளவு பெரிய கொடூரங்கள் எல்லாம் நடைபெறுகிறது. உண்மையிலேயே பொதுமக்கள் தான் இதற்கெல்லாம் ஒரு தீர்ப்பு எழுத வேண்டும். திமுக ஆட்சி ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. 24 காவல் நிலைய மரணங்கள் படுகொலைகள் நித்தம் நித்தம் நடக்கிற படுகொலைகள் இதைப் பொதுமக்கள் பார்த்துக்கொண்டு தக்க தீர்ப்பை அவர்கள் தர வேண்டும்.
இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்போது கூட அஜித்குமாரின் தாயார் சொன்னார், ‘எங்களுக்கு இந்த உதவி எல்லாம் பெரிதல்ல. நீதி வேண்டும்’ என்று கேட்கிறார். இந்த கொலையைச் செய்தவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும். தலைமைச் செயலகத்தில் நிகிதா யாருக்கு போன் செய்தார்? அவருடைய பெயர் வெளியிடப்படவேண்டும், அவரும் தண்டிக்கப்பட வேண்டும்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.