"மதுரைக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?" - இபிஎஸ் கேள்வி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், "மதுரைக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது?" என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை போட்டு மறைக்க முயன்றதை போன்று தான், 4 ஆண்டுகால ஆட்சியின் அவலங்களை மறைக்க முயல்கிறது திமுக அரசு.
சங்கம் வளர்த்து தமிழுக்கு பெயர் தந்த மதுரையை, தமிழ்நாட்டின் இரண்டாவது மாநகராட்சியை, கல்லும் மண்ணுமான தரமற்ற சாலைகள், முறையற்ற சாக்கடை வடிகால் என அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாநகராட்சியாக மாற்றி, கற்காலத்திற்கே கொண்டு சென்றதே திமுக அரசின் சாதனை!
நீங்கள் வாக்குறுதி அளித்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? போட்டித் தேர்வுகள் மையம் எங்கே? தொழில் வழித் தடம் எங்கே? வர்த்தக மையம் எங்கே? மதுரை மெட்ரோ எங்கே? மதுரைக்கு சொன்ன எதேனும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா? உங்கள் அப்பா பெயர் விளம்பரத்துக்காக ஒரு நூலகம் அமைத்ததை மட்டும் வைத்துக்கொண்டு, இது தான் சாதனை எனில், மதுரை மக்களுக்கு இதை விட பெரும் சோதனை என்ன இருக்கப் போகிறது?
பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை போட்டு மறைக்க முயன்றதை போன்று தான், வெற்று விளம்பரங்களால் 4 ஆண்டுகால அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைக்க முயல்கிறது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
சங்கம் வளர்த்து தமிழுக்கு பெயர் தந்த மதுரையை, தமிழ்நாட்டின் இரண்டாவது மாநகராட்சியை,
கல்லும் மண்ணுமான… pic.twitter.com/8JajavKZvd
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) June 1, 2025
பந்தல்குடி கால்வாயை திரை போட்டு மறைத்ததே வெட்கக்கேடான செயல். போட்டோ ஷூட் தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதா? இத்தனை கேள்விகளுக்கு இடையே, பொதுக்குழு நடத்துகிறேன் என மதுரைக்கு வர கூச்சப் பட்டிருக்க வேண்டும்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.