“நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும்” - சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இபிஎஸ் வலியுறுத்தல்!
சென்னை பெரம்பூர் வீனஸ் பூங்கா எதிரே உள்ள சுகாதாரத்துறை அலுவலகம் மொட்டை மாடியில் 3 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் உட்பட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில்,…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 27, 2025
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
“சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது. அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால்தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை திமுக அரசு உணர வேண்டும். “SIR” போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல “SIR”கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது. இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.