“முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேச கூடாது என முடிவு செய்துள்ளோம்” - நயினார் நாகேந்திரன் பேட்டி!
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டையோட்டி திடலில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருள்காட்சி ஜூன் 16 ஆம் தேதி மக்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஜூன்.19) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “முருக பக்தர்கள் மாநாட்டை காண நாளுக்கு நாள் மக்கள் அதிகரித்து வருகிறார்கள். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பல்வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் பேச கூடாது என முடிவு எடுத்து இருக்கிறோம். மாநாட்டிற்கு வரும் அரசியல் தலைவர்கள் ஆன்மீகம் மட்டுமே பேசுவார்கள்.
முதலமைச்சருக்கு பக்தி கிடையாது. இந்த ஆட்சியில் இருந்து ஆன்மீகத்தை காப்பதற்காகவே இந்த மாநாட்டை நடத்துகிறோம். கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்துவது அரசின் கடமை. அறுபடை முருகன் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றி கோரிக்கை வைப்போம். அமித்ஷா இனி அடிக்கடி தமிழ்நாடு வருவார்” என்று கூறினார்.