"விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்திக் கொடுத்த அரசாங்கம் அதிமுக" - எடப்பாடி பழனிசாமி!
கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக விளையாட்டு அணியின் சார்பாக கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுக அரசு இருக்கின்ற போது எல்லா கிராமங்களுக்கும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என நாங்கள் செயல்படுத்தினோம்.
அதிமுக ஆட்சியின் போதுதான் விளையாட்டு வீரர்களுக்கு, அரசுதுறை வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் தயார்படுத்துவதற்காக விடுதிகள் கட்டிக்கொடுத்தோம். இன்றைக்கு தமிழகத்தில் விளையாட்டு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகின்றது. உடல் கட்டுடன் எதிர்பார்க்கும் மன அழுத்தம் குறைவதற்கும் உடலை பேணிக் காப்பதற்கும் விளையாட்டு முக்கியம்.
இன்றைக்கு விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை தரக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள் தான் விளையாட்டு வீரர்கள். அந்த அளவிற்கு விளையாட்டினை ஈடுபாடு கொண்டு முழு கவனம் செலுத்தி தங்களை எதிர் அணியில் இருக்கின்ற அவர்களை வீழ்த்துவதற்கு தயார்படுத்தக் கூடியவர்கள் விளையாட்டு வீரர்கள்.
அதிமுக ஆட்சியின் போது விளையாட்டு வீரர்களுக்கு அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு செய்தது. மேலும் முதல்வர் கோப்பைக்கான அறிவிப்பை வெளியிட்டு ஆங்காங்கே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு முதல்வர் கோப்பைகள் வழங்கப்பட்டது. நம்முடைய விளையாட்டு வீரர்களை திறமையானவர்களாக சர்வதேச அளவில் தயார் படுத்தும் விதமாக விளையாட்டு விடுதிகள் கட்டிக் கொடுத்தோம்.
அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்தின் தொகை மூன்று மடங்கு உயர்த்தி கொடுத்தோம். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்திக் கொடுத்த அரசாங்கம் அதிமுக. மேலும் சர்வதேச போட்டியில் விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்கின்ற பயிற்சியாளர்களுக்கும் நாங்கள் உதவித்தொகை கொடுத்தோம்" என்று தெரிவித்துள்ளார்.