“பள்ளிக் குழந்தைகள் திருநீறு வைத்து ருத்ராட்சம் அணிய வேண்டும்” - அண்ணாமலை பேச்சு!
இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மற்றும் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் அண்ணாலை பேசியதாவது, “இந்து மதம் இருக்கக் கூடாது என்பதற்காக பஹல்காமில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்துக்களில் வாழ்வியல் முறைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்து மக்களிடம் ஒற்றுமை இல்லாததால் இந்து வாக்குகளை அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்டு மதத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள். பள்ளிகளுக்கு செல்லக்கூடிய குழந்தைகள் நெற்றியில் திருநீறும் கழுத்தில் ருத்ராட்சம் கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும்.
ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு முருக பக்தர்கள் மாநாடு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. முருகன் கோயில்களில் வழிபாட்டு விவகாரத்தில் தலையிட்டால் சூரசம்காரம் செய்து விடுவோம் என மாநாட்டு செய்தியாக சொல்கிறோம். 120 நாடுகள் கிறிஸ்தவத்தை பின்பற்றுகிறது, 53 நாடுகள் இஸ்லாமியத்தை பின்பற்றுகிறது, 10 நாடுகள் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றுவதில்லை, 2 நாடுகள் மட்டுமே இந்து மதத்தை பின்பற்றுகிறது.
இந்து மதத்தை பாதுகாக்க இந்து மக்களிடம் எழுச்சி ஏற்பட வேண்டும். தமிழ்நாட்டில் இந்துக்களுக்கும் இந்துக்களை சாராதவர்களுக்கும் தனித்தனி சட்டம் உள்ளது. 2026 தேர்தலில் மக்கள் நிதி வேண்டாம், சாமி வேண்டும் என முடிவு செய்து விட்டார்கள். இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் தட்டி கேட்க வேண்டும். கோயில்களை இந்து அறநிலையத்துறை ஒழுக்கமாக நடக்கவில்லை.
2055 ஆம் ஆண்டில் உலகில் இஸ்லாமிய மக்கள் அதிகம் இருக்க கூடியதாக இருக்கும். இந்துவிலிருந்து ஒருவர் கூட மாற்று மதத்திற்கு மாறக்கூடாது. மாற்று மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர வேண்டும். தமிழ் மொழியில் ஆன்மீகமும் அறிவியலும் கலந்துள்ளது. 5,400 ஆண்டுகள் பழமையான தமிழ்நாட்டின் வாழ்க்கை முறை மாறாமல் தமிழர்களை அரசியல்வாதிகள் வாழ விட மாட்டார்கள். கோயில்களை சார்ந்து தமிழ் கலாச்சாரம் இருந்ததால் 5400 ஆண்டுகள் பழமையானதாக உள்ளது” என்று கூறினார்.