"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் நாளிலேயே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பகல் 12 மணிக்கு அவை தொடங்கியவுடன் பாஜக மூத்த எம்பி ஜக்தம்பிகா பால், மக்களவைக்கு தலைமைத் தாங்கினார். அப்போது, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு எழுந்து நின்றார். ஆனால் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அவையில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து மக்களவையில் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியளர்களை சந்தித்த ராகுல் காந்தி,
” நாடாளுமன்ற அவையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் எதிர்க்கட்சிகள் ஏதாவது சொல்ல விரும்பினால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. நான் எதிர்க்கட்சித் தலைவர், அவையில் பேசுவது எனது உரிமை, ஆனால் எனக்கும் பேச அனுமதி இல்லை. இது ஒரு புது உத்தியாக இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
அதேபோல், காங்கிரஸ் எம்.பியும் ராகுல் காந்தியின் தங்கையுமான பிரியங்கா காந்தி, "விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறதென்றால், எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதிக்க வேண்டும்." என்று வலியுறுத்தினார்.