நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு!
இந்தியாவில் ஆண்டுக்கு 3 முறை நாடாளுமன்றம் கூடுவது வழக்கம். அதன்படி, ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடைபெறும். இதில் குடியரசுத் தலைவர் உரை, பட்ஜெட் தாக்கல், நிதி மசோதா, மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் உள்ளிட்டவை இடம்பெறும். தொடர்ந்து, மழைக்கால கூட்டத்தொடர், மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படும். பெரும்பாலும் இந்த கூட்டத்தொடர்களில் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்கள் இடம்பெறும்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடருக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், SIR விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.