For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அமைச்சர் அன்பில் மகேஸ் பதவி விலக வேண்டும்” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
11:15 AM Feb 19, 2025 IST | Web Editor
“அமைச்சர் அன்பில் மகேஸ் பதவி விலக வேண்டும்”   பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Advertisement

பள்ளி மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய  பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அமைச்சர் அன்பில் மகேஸ் பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது.

குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது.

இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அமைச்சராகத் தொடர உரிமை இல்லை. உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்.

முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement