கனிமவளக் கொள்ளை : உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் அமையவுள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அருகே கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக, லாரி லாரியாக கிராவல் மண்ணைக் கொள்ளையடிப்பதால், அந்தப் பகுதியே பெரும் பள்ளமாக மாறியிருக்கிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், வண்டல் மண் அள்ளக் கோரி விண்ணப்பித்த பெண் ஒருவரின் பெயரில் உள்ள அனுமதி சீட்டைப் பயன்படுத்தி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் உறவினர் ஒருவர், கடந்த ஆறு மாத காலமாக பல கோடி மதிப்புள்ள கனிம வளங்களைக் கொள்ளையடித்திருக்கிறார்.
சமீபத்தில், கனிமவளங்களை ஏற்றி வந்த லாரியைத் தடுத்த பெண் கிராம அலுவலரையும், ஆளுங்கட்சி என்று கூறி திமுகவினர் நடவடிக்கை எடுக்காமல் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் இத்தனை மாதங்களாக மாவட்டத்தில் அமைச்சர் உட்பட அனைவருக்கும் தெரிந்தே நடைபெற்ற கனிமவளக் கொள்ளை, சமீபத்தில் சில ஊடகங்களில் செய்தியாக வெளிவந்ததும், வேளாண்மைத் துறை அதிகாரிகள், வட்டாட்சியர் உட்பட ஏழு பேரைப் பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
ஆறு மாதங்களாக கனிமவளக் கொள்ளை நடப்பது தெரிந்தும், ஆளுங்கட்சியான திமுகவினர் என்பதால் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்துவிட்டு, தற்போது சில கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் பலிகடாவாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உடனடியாக, இந்தக் கீழ்மட்ட அதிகாரிகள் மீதான பணி நீக்க உத்தரவை ரத்து செய்வதோடு, அமைச்சர் மற்றும் மாவட்டத்தில் அதிகாரமிக்க அதிகாரிகள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், கனிமவளக் கொள்ளையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.