மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அரசியலமைப்பை காப்பாற்றுவோம் என்ற தலைப்பில் கொடுமுடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார்.
இதில், கொடுமுடி வட்டாரத் தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். வட்டார தலைவர்கள் முருகேஷ், கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி, ரவி, சண்முகம், உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் சூரஜ் ஹெக்டே வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து
கொண்டு பேசினார்.
இதனை தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மதுரை மாநாடு மக்களை ஏமாற்றும் மாநாடு, இது மக்களுக்கான மாநாடு இல்லை. அரசியல் மாநாடு, முருகன் தமிழ் கடவுள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? முருகன் என்று கடவுள் இருப்பதாக அவர்கள் ஏற்றுக் கொண்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக செய்யும் வஞ்சனைகளையும் புறக்கணிப்புகளையும் தமிழ் கடவுள் முருகன் அனுமதிப்பாரா?
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய உரிமை தொகையை தரவில்லை, ரூ.2350 கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறைக்கு நிதியை தரவில்லை, தமிழ்நாட்டு மக்களின் ஜிஎஸ்டி விகிதாச்சார தொகை தரவில்லை, சென்னையில் தூத்துக்குடியில் மழை வெள்ளம் வந்தது பேரிடர் நிதி தரவில்லை. தமிழ் கடவுள் முருகன் இதனை மன்னிப்பாரா?
இது அனைத்தும் பகல் வேஷம், இது மிகப்பெரிய திருட்டு கூடாரம், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை அவர்கள் கொடுத்து விட்டு தமிழ் கடவுள் முருகனிடம் ஆசீர்வாதம் பெறட்டும். தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு முருகன் மாநாடு நடத்துவது சரியா? தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து விட்டு இதை நடத்துகின்றனர்.
தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் சென்று தடையானை கேட்டு சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என கேட்டது யார்? இதனை தமிழ் கடவுள் முருகன் ஏற்றுக் கொள்வாரா? சூரசம்காரம் செய்வார் 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்யப் போகிறார். பாஜகவிற்கும், பாஜகவுடன் போவோர்களுக்கும் தமிழ்நாட்டில் இடம் இருக்காது என்பதை தமிழ் முருகன் 2026 இல் நடத்தி காட்டுவார்.
அண்ணாமலை அவரது கட்சியினரிடம் முதலில் எச்சரிக்கையாக இருக்கட்டும். அவர் மற்றவர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்க முடியாது. தமிழ்நாட்டில் நாகரிகமாக இருக்க வேண்டும். யாருக்கு யார் எச்சரிக்கை மணி அடிப்பது.? திமுக இதுவரை ஏழு முறை ஆட்சியில் இருந்திருக்கிறது. அதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கிறது அண்ணாமலை யாருக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்.
தமிழ் கடவுள் முருகன் இவர்களுக்கு எச்சரிக்கை தர போகிறார். 2026 தேர்தலில் இடம் கிடையாது. இப்போது எதற்காக முருகனை அரசியல் ஆக்கினார்கள். ராமஜென்ம பூமி பாபர் மசூதி இடிப்பு ஆகியவற்றை கையில் எடுத்தார்கள் உத்தரபிரதேசத்தில் ராமர் கைவிட்டு விட்டார் அடுத்து ஜெய் ஜெகநாதர் அவரும் கைகொடுக்கவில்லை. தமிழ் கடவுள் முருகன் 2026 இல் தீர்ப்பளிக்க போகிறார்.
இந்தியா கூட்டணி எக்கு கூட்டணியாக இருக்கிறது தேச மக்களை காக்கவும் பாசிச சக்திகளை விரட்டவும் உருவான கூட்டணி. கூட்டணியில் தொகுதியை பொருத்தவரை அகில இந்திய தலைமை முடிவு செய்யும் காங்கிரஸ் மிகத் தெளிவாக இருக்கிறது அகில இந்திய தலைமை இது குறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.