“நிதி தர மறுக்கும் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்பது எந்த வகையில் நியாயம்?” - அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கேள்வி!
முதலமைச்சர் ஆகி நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை பயிர்க் கடன்களை ரத்து செய்யாமல் எளிய விவசாயிகளுக்கு ஸ்டாலின் துரோகம் செய்து கொண்டிருக்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தேர்தல் அறிக்கையில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அண்ணாமலை நினைவூட்டி எண்.33வது வாக்குறுதி என்று குறிப்பிட்டு அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளை ஏமாற்றுகின்ற ஒரு அரசாக முதலமைச்சர் இருக்கின்றார் என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை அவர் சுமத்தினார். துறை அமைச்சர் என்ற முறையில் நானும் அதற்கு உரிய விளக்கத்தை முறையாக அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தேன்.
அறிக்கையை படித்த பிறகு அவருக்கு நான் புரிந்திருக்கும் என்றுதான் நான் நம்பினேன். ஆனால், அதை இன்னும் புரியாததை போல் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யமால் ஏமாற்றி விட்டார் என்று, விவசாயிகள் மீது இரக்கம் காட்டுகின்ற வகையில் அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
கொடுத்த வாக்குறுதியை நாங்கள் மறுக்கவில்லை. அவர் குறிப்பிட்டதை போல தேர்தல் அறிக்கையின் அறிவிக்கை எண்.33-ன் படி நான் அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?, இல்லையா? என்பதை அவருக்கு நேரடியாக தெரியவில்லை என்றாலும் தெரிந்தவரிடத்தில் கேட்டு தெரிந்துக்கொண்டு கூட ஒரு மறுப்பறிக்கையாக கொடுத்திருக்காலம்.
எதிர்கட்சியாக இருப்பவர்கள் கேள்வி கேட்பதில் எங்களுக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை. ஆனால், அந்த கேள்விகளுக்கு நாங்கள் சொல்லுகின்ற பதிலை அது சரியானதாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்வது இது எந்த வகையில் நியாயம் என்பதை கேள்வியாகதான் நான் கேட்க விரும்பிகிறேன். அவர் ஒரு வாக்குறுதியை சொல்லுகிறார். அதை நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறோம்.
அதற்காக எவ்வளவு தொகை, எவ்வளவு பயனாளிகள் விவசாயிகள் பயன்பெற்றார்கள் என்று நாங்கள் புள்ளிவிவரங்களை சொன்ன பிறகும், மீண்டும் அதை சொல்லுவதில் எந்த விதத்தில் நியாயம். இது இப்படியே தொடர்ந்து நீடிப்பது நல்லதாக தெரியவில்லை. திமுகவை பொறுத்தவரையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றப்பட்டிருகிறது.
அப்படி நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளில் தேர்தல் அறிவிப்பில் 33வது வரிசை எண் என்று குறிப்பிட்டிருக்கிராறே அதுவும் விவசாயிகளுக்கு நிறைவேற்றப்பட்டிருகிறது. குறிப்பாக, பயிர்கடன் ரூ.12.110 கோடி மதிப்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, 5 பவுன் அளவிற்கு கீழ் கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைத்தவர்களுக்கு ரூ.5013 கோடி நகை கடன் தள்ளுபடி செய்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.2755 கோடி அளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இவை அனைத்தும் மொத்தமாக ரூ.19,878 கோடி அளவிலான கடன்கள் 45,09,640 எண்ணிக்னையிலான பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்தும் தேர்தல் காலத்திலேயே வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டு திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்று இன்று நான்காவது ஆண்டை நோக்கி செல்லும் இந்த வேலையில் இம்மாதிரியான கருத்தினை தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன்களை இல்லை என்று இப்பொழுது மறுப்பது எந்த வகையில் நியாயம்?
அண்ணாமலையை பொறுத்தவரையில் அவர் பகலில் ஒரு அறிக்கை கொடுக்கிறார், அந்த கேள்விக்கான விளக்கத்தை நான் தெரிந்துக்கொண்டு உரிய பதிலை தெரிவித்த பிறகு நள்ளிரவில் அறிக்கை கொடுத்திருக்கிறார் என்று சொல்லுகிறார். பொது வாழ்கையில் இருக்க கூடிய எல்லோருக்கும் இரவு, பகல் ஒன்றுதான். அது முறையாக என்னுடைய கவனத்திற்கு வரும், வந்த பிறகு அது சம்மதமாக நான் ஆய்வுகளை செய்துதான் அறிக்கை வெளியிட முடியுமே தவிர, அவர் எப்பொழுது அறிக்கை கொடுப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டு அடுத்த நிமிடமே நானும் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல.
நான் மீண்டும் அவருக்கு கேட்கிறேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை. நாங்கள் நிறைவேற்றிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று சொல்கிறார். ஆனால், அதே நேரத்தில் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. குறிப்பாக மத்திய அரசு சார்பில் மாநிலங்களில் ஏற்படக்கூடிய பேரிடர் மேலாண்மைக்காக ரூ.36,000 கோடி கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசிடமிருந்து பெற்ற தொகை ரூ.260 கோடி மட்டுமே ஆகும். இதை முதலமைச்சர் மத்திய அரசிற்கு நினைவூட்டி, கடிதம் அனுப்பியும் எந்தவித நடவடிக்கைகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு மேற்கொள்ளவில்லை.
இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நலனில் உண்மையான அக்கறை அண்ணாமலைக்கு இருக்குமேயானால், இவருடைய செல்வாக்கை வைத்து மத்திய அரசிடமும், பிரதமர் இடத்திலும் அந்த உதவிகளையெல்லாம் கேட்டு பெற்றுத்தந்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி செய்கின்ற நல்ல காரியமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றாமல் விட்டுவிட்டு, கொடுக்க வேண்டிய நிதிகளையும் கொடுக்க மறுத்துக் கொண்டிருக்கின்ற கட்சியை சார்ந்தவர் இந்த கேள்வியை எழுப்புவது எந்த வகையில் நியாயம்”.
இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.