திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? - நயினார் நாகேந்திரன் கேள்வி...!
தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”வேளாண்துறை பிரச்சனைகளைத் தீர்க்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும் விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதி எண் 35-ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
மேடைக்கு மேடை "நானும் டெல்டாகாரன் தான்" என உரிமை கொண்டாடுகிறீர்களே! ஒருபுறம், கொடுத்த வாக்குறுதியைக் கிடப்பில் போட்டு, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேளாண் மேம்பாட்டுக் குழுக்களை அமைக்காததோடு, மறுபுறம் விவசாயிகளுக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை இரட்டிப்பாக்கியது தான் தங்களின் நான்கரை ஆண்டு திமுக அரசின் சாதனை. விவசாயிகளுக்கான மின் இணைப்பைச் சரிவர வழங்காதது தொடங்கி, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறுதானியங்களை விற்காதது வரை திமுக அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த இன்னல்கள் எண்ணிலடங்காதவை.
வியர்வை சிந்தி விளைவித்த பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை தராமல் ஏமாற்றியதோடு, உரிய விலை கிடைக்காமல் தெருவில் கொட்டி போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டு தவிக்கவிட்ட திமுக அரசைத் தூக்கியெறிய விவசாயப் பெருமக்கள் தயாராகிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.