"2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்" - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "2026 மட்டுமல்ல 2031 மட்டுமல்ல 2036 ஆம் ஆண்டிலும் தமிழகத்தின் திமுக தான் ஆட்சி அமைக்கும். இந்த தேர்தல் இல்லாவிட்டாலும் அடுத்த தேர்தலில் ஆவது நாகேந்திரனை கரையேற சொல்லுங்கள்" என்று கிண்டலாக பதிலளித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, "தமிழ்நாட்டில் ஒரு ஆண்டிற்கு 1.50 லட்சம் பொறியாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். தமிழ்நாடு டேலண்ட் கேப்பிடல் ஆஃப் இந்தியாவாக திகழ்கிறது. தொழில்துறை சார்ந்த உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தொழில்துறை சார்ந்து ஏற்றுமதி
செய்யும் எந்த பொருளாக இருந்தாலும் தமிழகத்தில் உற்பத்தி செய்ய முடியும் அதற்கேற்ப வேலை வாய்ப்பு தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நான்கு ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்து 10 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீட்டை தமிழ்நாட்டு முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார். இதனால் 31 லட்சம் வேலை வாய்ப்புகளுக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது. இந்திய அளவில் உள்ள முதல் 100 பட்டியலில் உள்ள கல்லூரிகளின் 27 கல்லூரி தமிழகத்தில் உள்ளது.
இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 41% தமிழ்நாட்டை சார்ந்தவர்கள். நம்முடைய மக்கள் தொகை 6 சதவீதத்துக்கு கீழ் தான் உள்ளது ஆனால் 11 சதவிகிதம் ஜிடிபி யின் உற்பத்தி வழங்குகிறோம். தமிழகத்தில் கல்விக்கும் தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் இதற்கெல்லாம் காரணம் பரவலான வளர்ச்சியே என தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் வந்த மாணவர் ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பேசினாலும் ஓரமாக உட்கார்ந்து போனில் பேசிக் கொண்டிருக்கிறாய். உனக்கு அந்த போனை கொடுத்தது யாரு என நீ தெரிந்து கொள்ள வேண்டும் இந்த போன் உங்கள் கையில் வந்ததற்கு திமுக என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தமிழ் பேசுங்கள் ஆங்கிலம் பேசுங்கள் வாங்க ஜி போங்க ஜி என்று பேசாதீர்கள். உலக அளவில் வளர வேண்டும் என்றால் ஆங்கிலம் தான் உறுதுணையாக இருக்கும். தற்போது உள்ள சூழலில் எல்லாம் தெரியும் என சொல்லுகிறார்கள், எப்படி தெரியும் என்று கேட்டால் எனக்கு வாட்ஸ் அப்பில் வந்தது என்று சொல்கிறோம். பெரியார் தாத்தா யார் என உங்களுக்கு தெரியுமா என மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
எந்த தாத்தாவை தெரிகிறதோ இல்லையோ கேஎஃப்சி தாத்தாவை நன்றாக தெரிகிறது. உண்மையாக தெரிய வேண்டிய தாத்தா பெரியார், கலைஞர் பேரறிஞர் அண்ணாவை தான் தெரிய வேண்டும். உங்களை எல்லாம் அழைத்து வந்து இந்த நலத்திட்ட உதவிகளை செய்கிறார்கள். இது செய்வது மூலமாக உங்களை உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என கேட்கவா செய்கிறோம் உங்களை சிந்தியுங்கள் என்று தான் சொல்கிறோம் என தெரிவித்துள்ளார்.