இந்தியா கூட்டணி சார்பில் டிச. 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம்!
இந்தியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச. 19) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் 28 கட்சிகள் பங்கேற்றன. தமிழ்நாட்டிலிருந்து திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த பிறகு முதல்முறையாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு, பாஜகவுக்கு எதிரான தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
சுமார் 3 மணிநேரம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது,
“இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் சுமூகமாக நடந்தது. 3 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து விஷயங்களையும் விவாதித்தோம். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்திய வரலாற்றில் 151 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம்.