பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு - பதிலளிக்க கோரி சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் விழாவை முன்னிட்டு, கடந்த 2011ல் நடைபெற்ற நிகழ்வில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக மத்திய அரசு குழுவை அமைத்து விசாரித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சம்பவம் நடந்து 15 வருடங்கள் ஆகியும் இதனுடைய விசாரணை முடிவடைந்ததா? முடிவடையவில்லையா? குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த வழக்கில் நானும் ஒரு மனுதாரராக இருந்தேன். ஆகவே வழக்கின் நிலை குறித்து தெரிய வேண்டும். சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் சந்தீப் மீட்டல் உள்ளிட்ட பலர் உயர் பொறுப்பிலும் உள்ளனர் சிலர் ஓய்வு பெற இருக்கிறார்.
எனவே இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக RTI அறிக்கை கேட்டு கேள்வி எழுப்பி இருந்தேன். ஆனால் எனது மனுவை நிராகரித்து தகவல் தர இயலாது என சிபிஐ தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல ஆகவே பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவ சிபிஐ விசாரணை அறிக்கை தகவல் தர இயலாது என குறிப்பிட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சௌந்தர் முன்பு நடைபெற்றது. அப்போது அவர், சிபிஐ விசாரணை அறிக்கை கொடுப்பது குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.