கோவையில் பாஜக, அதிமுக வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் கட்சியின் மாநில ஐடி விங் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நேற்று இருவரும்
சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை பிரச்சாரம் செய்ய மதியம் 12:30 மணிக்கு போலீசார் நேரம் ஒதுக்கி
இருந்தனர்.
அதேபோல அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு அப்பகுதியில்
பிரச்சாரம் செய்ய இரவு 7 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி இரவு 7
மணிக்கு தொட்டிபாளையம் பகுதியில் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் அதிமுக
நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் அங்கு பிரச்சாரம் செய்ய சுமார் 7 மணி
நேரத்திற்கு பிறகு தாமதமாக வந்தனர்.
அப்போது பாஜகவின் பிரச்சார வாகனம் ஒன்று அதிமுகவின் பிரச்சார வாகனத்தை உரசி முந்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிமுகவினர் பிரச்சார வாகனத்தை சிறை பிடிப்பதற்கு முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்று வாகனம் மூலம் அங்கிருந்து கிளம்பிச்
சென்றுவிட்ட நிலையில் அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட அதிமுக
நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி முதலில் பிரச்சாரம் செய்ய
அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அதிமுக சார்பில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 127 இன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மீது அனுமதியின்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.