மிரட்டும் கனமழை! நீலகிரியில் பள்ளிகள் விடுமுறை - உதவி எண்கள் அறிவிப்பு!
இந்திய வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (ஆகஸ்ட் 5) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர். மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் உதவிக்கு அழைக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து 9488700588 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், மழைக்கால பாதிப்புகள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.