கோவையில் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்” – சுப்ரியா சுலே பதிவு!
கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்நிலையில், கோவையில், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஒண்டிப்புதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.
இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததால், காரை தடுத்து நிறுத்துவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர், பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அண்ணாமலை காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, கோவை சிந்தாமணிபுதூரில் சாலை மறியலில் ஈடுபட்டார். அதன் பின்னர், அண்ணாமலையுடன் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டதன் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது காவல்துறையினர், 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறியதால் அண்ணாமலை மீது இரண்டாவது முறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றிரவு 10.30 மணிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், அவர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடதக்கது.