"தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது" - அமைச்சர் சேகர்பாபு!
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழுவ தலைவருமான பி.கே சேகர்பாபு கள ஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில் திரு.வி.க.நகர் பேருந்து நிலையம், அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு மையம், பெரியார் நகர் பேருந்து நிலையம், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன சந்தை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் மக்கள் சேவை மையத்தில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,
"சென்னை பெருநகர வளர்ச்சி குழும சார்பில் 13 பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மகாபலிபுரம் செங்கல்பட்டு ஆவடி மற்றும் தீநகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் பேருந்து நிலையங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முத்திரைகளாக உருவாக்கப்பட்டு வருகிறது.
பெரியார் நகர் மற்றும் திருவிக நகர் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டு அடுத்த மாதம் ஜூலை இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும் பொழுது வட சென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி ஆகி இருக்கும்.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகள் தீவிர படுத்தப்பட்டு இருக்கிறது. திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றவில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர்,
தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது அண்ணாமலையை மேடை ஏற சொல்லுங்கள் சொன்னதை எத்தனை செய்துள்ளோம் சொல்லாததை எத்தனை செய்துள்ளோம் என்று பட்டியலிடுகிறோம். குறை சொல்லக் கூடிய தளத்தில் இருப்பவர்கள் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள் என்று கூறிய அவர் அரசியல் களம் வேண்டும் என்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை போன்றோர் சொல்லிக் கொண்டு உள்ளார்கள், நடுநிலையாளர்கள் இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள், வசை பாடியவர்கள் கூட இந்த ஆட்சியை வாழ்த்துகிறார்கள் என்று கூறினார்.
முடிச்சூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரையில் நீதிமன்ற வழக்கு ஒன்று நிறுவையில் உள்ளதாகவும் கூடிய விரைவில் வழக்கை இறுதிக்கு கொண்டு வந்து முடிச்சூர் பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயன்படுத்தும் அளவிற்கு மேம்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.