காரைக்குடி அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி - 2 மணி நேரத்தில் இளைஞர்களை தட்டி துக்கிய போலீசார்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் கிராமம் இந்திரா நகர்
பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (55). இவர் இந்தியன் வங்கியில் இருந்து 2
லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மாஸ்க் அனிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாக்கியம் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்றனர்.
பாக்கியம் உடனடியாக இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் கல்லல் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் குறித்து தெரியவந்தது. குற்றவாளிகளின் இருப்பிடத்தை அறிந்த போலீசார் உடனடியாக விரைந்தனர்.
பின்னர் அதே கல்லல் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 23), 22 வயதுடைய சுபஸ்ரீ (சுபஸ்ரீ ஆண்) ஆகிய இருவரையில் 2 மணி நேரத்தில் கைது செய்தனர். மேலும், பாக்கியத்திடம் இருந்து பறித்துச் சென்ற பணத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.