தவெகவில் இணைந்தது ஏன்..? - செங்கோட்டையன் விளக்கம்...!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.இதையடுத்து செங்கோட்டையனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனிடையே நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனுக்கு ஈரோடு,கோவை,நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செங்கோட்டையன், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய செங்கோட்டையன்,
"அதிமுகவில் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். 1972ல் அதிமுக எனும் இயக்கம் தொடங்கியபோது இருந்தவன் நான். அதிமுகவின் முதல் பொதுக்குழுவின் பணிகள் எனக்கு அளிக்கப்பட்ட போது அப்பணிகளை சிறப்பாக முடித்தேன். அதற்காக எம்ஜிஆர் அவர்களால் பாராட்டும் பெற்றேன். அதிமுக தொடங்கப்பட்ட போது 100 படம் போல 100 நாள்களில் மறைந்து விடும் என்று எதிர்க்கட்சியினர் சொன்னார்கள். ஆனால் அதிமுக மாபெரும் இயக்கமாக உருவானது.
அண்ணாவால் பாராட்டு பெற்றவர் எம்ஜிஆர். மூன்று முறை முதலமைச்சராக இருந்த எம்.ஜி. யார் நிரந்தர முதல்வர் என்ற பெயரைப் பெற்றவர். அதன்பின்னர் 1987ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் இன்று இருக்கும் நிலைமைகள் வேறு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நாங்கள் ஆட்சி நடத்தினோம். ஆனால் கால சூழலில் அதிமுக 3 கூறுகளாகப் பிரிந்துள்ளது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்திய கருத்துபரிமாறப்பட்டதே தவிர செயல்படுத்தப்படவில்லை.
நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று பார்த்துக்கொள்வார். அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் தேவர் ஜெயந்திக்குச் சென்றேன். சென்று திரும்பிய இரு நாள்களில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.
50 ஆண்டுகளாக இந்த இயக்கத்திற்காக ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்த எனக்கு கிடைத்த பரிசுதான் அது. நான் மட்டுமன்றி என்னைச் சார்ந்தவர்களையும் நீக்கப்பட்டனர். துக்க விசாரிப்பிற்கு சென்ற ஒரு இளைஞர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு தெளிவான முடிவுகளை எடுத்தபிறகுதான் நேற்று ராஜினாமா செய்தேன். இன்று தவெகவில் இணைத்திருக்கிறேன்.
நான் ஏன் தவெகவில் இணைந்தேன் என்ற கேள்வி எழும்.. திமுக, அதிமுக வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். 3 ஆவதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். தமிழகத்தில் ஒரு தூய்மையான ஆட்சி வரவேண்டும் என்று விஜய் மாபெரும் இயக்கத்தை உருவாக்க வெற்றி பயணத்தை தொடங்கியிருக்கிறார். தமிழகத்தில் மாற்றம் வேண்டும். 'ஏன் இவர்கள் மட்டுமேதான் ஆள வேண்டுமா? தூய்மையான ஆட்சிக்கு புதிதாக ஒருவர் வேண்டும்' என மக்கள் நினைக்கிறார்கள்.
எல்லா மநிலங்களிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டு வருகிறது. டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் புதிய கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. 2026ல் மக்களால் வரவேற்கப்படுகிற, மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற, மக்களால் உருவாக்கப்படுகிற ஒரு புனித ஆட்சி உருவாவதற்கு தவெக தலைவர், அன்பிற்கினிய இளவல் விஜய் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகி அவர் வெற்றியை எட்டுவார். தேசிய மற்றும் திராவிட கட்சிகளிடம் இருந்து என்னை எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை, யாரும் என்னை அணுகவில்லை" என்று பேசினார்.