அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? தமிழிசை சௌந்தரராஜன்!
திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனோடு வடிவுடைய கோயிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "தமிழ்நாட்டில் பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது.
திருவொற்றியூரில் 17 வயது சிறுவன் டியூசன் சென்று வீடு திரும்பிய போது, மழைநீரில் கால் வைத்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சிங்கார சென்னை என கூறும் முதலமைச்சர் சாதாரண மழைக்கு கூட, மாணவர்கள் சாலையில் நடக்க முடியவில்லை என்றால் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை.
ஆனால், நல்லாட்சி நடப்பது போல் விளம்பரம் செய்கின்றனர். டாஸ்மாக் மூடல், கேஸ் மானியம், கல்விக்கடன் ரத்து, பழைய பென்சன், மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு குறித்து மக்கள் கேட்டால் என்ன செய்வார். இவர்கள் எதையும் சரியாக செய்யவில்லை. கூலிப்படையை வைத்து கொலை செய்வது அதிகரித்துள்ளது.
பள்ளி மாணவரை கடத்துகின்றனர். அனைத்து விதத்திலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. ஆனால், ஓரணியில் தமிழ்நாடு, நாங்கள் வீடுதோறும் செல்வோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க போகிறோம். எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செல்கிறார்.
இதற்கு பாஜக பக்க பலமாக இருக்கும். எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும். திமுக விளம்பரப்படுத்த வேண்டிய சூழலில் உள்ளது. பிரசாரம் வாழ்க்கையல்ல. தேர்தல் பற்றியே இவருக்கு கவலை, மக்களை பற்றி கவலைக்கிடையாது. 2026ல் மக்கள் இவர்களை கவலையடைய செய்வார்கள். மடப்புரம் காவலாளி உயிரிழப்பு விவகாரத்தில், இந்த காவல் துறை அதிகாரிகளிடம் அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? யாருடைய அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை. அனைத்து திருட்டு வழக்குகளிலும் இது போன்ற இருக்கிறதா. எந்த விசாரணையும் காவல் நிலையத்திற்குள் நடக்கவில்லை.
சாரி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதுமா, போலீஸ் ஸ்டேசனில் உண்மை வெளி வருகிறதா, ஆனால், உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இது போன்று செய்கின்றனரா என்று தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு பின் தான் தனிப்படைகள் கலைக்கப்பட்டுள்ளன. அப்படியானால், இதுவரை தனிப்படைகளை கூலிப் படைகளாக வைத்து பயன்படுத்திக் கொண்டிருந்தீர்களா என்று தானே அர்த்தம்.
காவலர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். காவல், ஆசிரிய, மருத்துவ பணியிடங்களில் காலியிடம் உள்ளது. அனைவரும் அழுத்ததில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து பணியிடங்களும் நிரப்ப வேண்டும். முதல்வர் நேரடியாக சென்றிருக்க
வேண்டும். அதை எது தடுத்தது.
தவெக விஜய் நேரில் சென்றிருப்பதை ஸ்டன்ட் என சொல்கின்றனர். எவ்வளவு பெரிய இழப்பிற்கு சாரி என்று சொன்னால் போதுமா. எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் போது முதலமைச்சர் பொறுப்பு, இவர்கள் ஆட்சி செய்யும் போது, அதிகாரிகள் பொறுப்பு. இது எந்தவிதத்தில் நியாயம்" என்று தெரிவித்துள்ளார்.