"சூரியன் உதிக்கிறதோ இல்லையோ.. தாமரை மலர்ந்தே தீரும்" - தமிழிசை செளந்தரராஜன் பேச்சு
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் உள்பட 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது,
"இந்த கூட்டம் நல்லதொரு, நமக்கு உற்சாகம் தருகின்ற நிகழ்ச்சி. அதே நேரம் திமுக கூட்டணியினருக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி. எந்த ஷா வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என்பவர்கள், இன்று அமித் ஷா வருகையால் பதற்றமடைந்துள்ளனர். சங்கிகள் என்று அழைத்தால் நாங்கள் எதும் நினைக்க போவதில்லை. ஊழல்வாதிகள், குற்றவாளிகள் என்று சொல்வதைவிட சங்கிகள் என்பது மேன்மையான வார்த்தைதான்.
மதுரை மண்ணில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு மிக பெரும் வெற்றியை பெற்று தரும். 2026 ஆம் ஆண்டு இதே நிர்வாகிகளோடு பாரத பிரதமர் தலைமையில் வெற்றி விழா கொண்டாட அன்னை மீனாட்சி அருள் புரிவாள். திமுக கூட்டணியை சார்ந்தவர்கள், ஏன் மதுரையை தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.
ஏனென்றால் இது அநிதிக்கு எதிராக போராடிய கன்னகி மண். பெண்களுக்கு எதிராக உள்ள இந்த ஆட்சி குறித்து கேட்பதும் இந்த மண்ணில் தான். யார் அந்த சார்? என்று கேட்பதும் இந்த கன்னகி மண்ணில் தான். சூரியன் உதிக்கிறதோ இல்லையோ.. தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்"
இவ்வாறு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.