“முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” - அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்ற உத்தரவை நீக்கக்கோரி, அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு அரசாணையை கடந்த 2006ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அந்த வகையில் அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி மூலமாக தேர்ச்சி பெற்று தற்போது வரை தங்களுக்கு எந்த ஒரு பணி நியமனமும் கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையை எதிர்த்தும் ஆகம விதிப்படி உள்ள கோயில்களுக்கு ஆகம விதிப்படியே அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கக்கூடிய அந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தை நாடி ஒரு தடை உத்தரவை பெற்றுள்ளது.
அந்த இடைக்கால தடை உத்தரவால் தற்போது வரை அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் பணி அமர்த்தப்படாமல் உள்ளனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து அறநிலைய துறை சட்டத்தின் படி அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கு தனிப்பட்ட பட்டப்படிப்பு வயது வரம்பு உள்ளிட்டவை வரையறுக்கப்படவில்லை. அதே வேளையில் அர்ச்சகர்கள் பயிற்சியை முடித்து இருந்தால் அவர்களை பணி நியமனம் செய்யலாம் என்று விதி உள்ளது.
ஆனால், முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்றும் மூத்த அர்ச்சகர்கள் கீழ் கோயில்களில் பயிற்சி பெற்ற பின்னரும் தாங்கள் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம். எனவே முறையாக பயிற்சி பெற்ற எங்களை தகுதியின் அடிப்படையிலும் இந்து அறநிலையத்துறை நடத்திய தேர்வுகள் மற்றும் அதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் அதற்கு ஏதுவாக இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடித்து உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். எனவே இந்த இடையீட்டு மனுவை ஏற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.