மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை... இணைய சேவை துண்டிப்பு!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். மணிப்பூரில் தொடர்ந்து, டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்தன. இதற்கிடையே, அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகினார். இதையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு பல இடங்களில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் தடை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு… எந்த மாநிலம் முதலிடம்? உயிரிழப்பு எண்ணிக்கை இத்தனையா?
இதனையடுத்து, மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவியது. இந்த நிலையில், மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனை எதிர்த்து மெய்தி மக்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைகளில் வாகனங்களின் டயர்கள், மரப்பொருள்கள், பேருந்துகளை எரித்ததாக கூறப்படுகிறது. மேலும், 50 இளைஞர்கள் தங்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாக தெரிவித்தனர்.
வன்முறையை தடுக்க பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டனர். இதனால், மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதேவேளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபல், பிஷ்ணுபூர், காக்சிங் ஆகிய 5 மாநிலங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.