"யாரோ ஒருவரின் தூண்டுதலால் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்திருக்கிறார்" - ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம், ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்கிற வரைமுறைகள் உள்ளன.
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை. அண்ணா, எம்ஜிஆர் தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால் விஜய் அண்ணாவையும், எம்ஜிஆர் குறித்தும் பேசுகிறார்.
விஜய்க்கு எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து விஜய் பேசினால் அது அவருக்கு தான் பின்னடைவாக மாறும் திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி தான் சரியானது என தேசிய கட்சிகளுக்கு கூட தெரிந்துள்ளது. விஜய் கட்சி தொடங்கியவுடன் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார்
அதிமுக குறித்து விஜய் விமர்சனப் பேச்சுக்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் மனவேதனையுடன் உள்ளார்கள் என்பது விஜய்க்கு எப்படி தெரியும்?, எந்த அறிமுக தொண்டரிடம் விஜய் பேசினார். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்து பேசியிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.