For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி!

03:28 PM Feb 17, 2024 IST | Web Editor
டெல்லி சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி
Advertisement

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை நிருபித்து வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

தலைநகர் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. ஆனால், சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம் என தெரிவித்து சம்மனை திருப்பி அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து 5 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். எனவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்தது. இது தொடர்பான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது காணொலி மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார். இதனையடுத்து பிப்.19-ம் தேதி அவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே,  டெல்லி சட்டசபையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை  இன்று கொண்டு வந்து பேசினார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தார். எனவே அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  ஆம் ஆத்மியைச் சேர்ந்த 2 பேர் சிறையிலும், மீதமுள்ளோர் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. 

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், “ஆம் ஆத்மியின் ஒரு உறுப்பினர் கூட பிரிந்து செல்லவில்லை. 2 உறுப்பினர்கள் உடல்நலம் சரியில்லாத காரணத்தில் கலந்து கொள்ளவில்லை. 3 உறுப்பினர்கள் சொந்த பணி காரணமாக வெளியே சென்றுவிட்டனர். 2 பேர் ஜெயிலில் உள்ளனர். ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். நாட்டின் 3வது கட்சியாக ஆம் ஆத்மி இருக்கிறது. எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் இருப்பதை நிரூபிக்கவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினேன். 2024-ம் ஆண்டு தேர்தலில், பாஜக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. 2029 தேர்தலில் வெற்றிபெற்று பாஜக இல்லாத நாட்டை ஆம் ஆத்மி கட்சி உருவாக்கும்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement