For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இளம்பெண் உயிரிழந்த விவகாரம் - கணவர் உள்பட மூவர் கைது!

திருமணமான 78 நாட்களில் இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
10:03 PM Jun 29, 2025 IST | Web Editor
திருமணமான 78 நாட்களில் இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண் உயிரிழந்த விவகாரம்   கணவர் உள்பட மூவர் கைது
Advertisement

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். (ஈரோடு இடைத்தேர்தலில் இந்து திராவிட மக்கள் கட்சியின் சார்பில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு உள்ளாடார்.) இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் திருப்பூர்  வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் (வயது 28) (திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகன் வழி பேரன்) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

Advertisement

இந்த நிலையில் தனது காரில் கணவர் வீட்டிலிருந்து கிளம்பிய ரிதன்யா மொண்டி பாளையம் கோயிலுக்கு செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தினார். பின்னர் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை உட்கொண்டு காரிலேயே மயங்கினார். காரினுள் ரிதன்யா மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் சேயூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரிதன்யாவின் உடலை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி 78 நாட்களிலேயே புதுப்பெண் உயிரை மாய்த்துக் கொண்டதால் ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பெண்ணின் உறவினர்கள் அவிநாசி அரசு மருத்துவமனை முன்பாக சேயூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்ததை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், ரிதன்யாவின் உடலை பார்க்க வந்த கவின் குமார் மற்றும் அவரது பெற்றோரை பெண்ணின் உறவினர்கள் தாக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாக்க முயன்றவர்களை தடுத்து கணவர் வீட்டாரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

முன்னதாக திருமணத்தின் போது பெண்ணின் வீட்டில் 100 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைத்ததாக பெண்ணின் வீட்டார் தெரிவித்தனர். மேலும், திருமணம் நடைபெற்ற 10 நாட்களில் இருந்து கணவரின் தாய், தந்தை எதற்கெடுத்தாலும் ரிதன்யாவை திட்டி வந்ததாக கூறினர்.  விளக்கேற்றினால் கூட மூன்று பேரும் அமர்ந்திருக்க, ரிதன்யாவை ஒரு மணி நேரம் நிற்க வைத்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

அப்பெண்ணின் கணவர் கவின் குமாரின் குடும்பத்திற்கு வாடகை போன்றவை மூலம் மாத வருமானம் மட்டும் 20 லட்சம் ரூபாய் வந்ததாகவும், இதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து முழுநேரமும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரிதன்யா இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த போது, “சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதே” என பெற்றோர் ஆறுதல் தெரிவித்து வந்ததால் மனமுடைந்து ரிதன்யா உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ரிதன்யா விஷ மாத்திரையை உட்கொள்வதற்கு முன்பாக தனது தந்தையின் வாட்ஸ் அஃப் எண்ணிற்கு உருக்கமாக ஆடியோ ஒன்றை அனுப்பி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

அதில் ரிதன்யா, “போலீஸ் அல்லது வேறு யாரேனும் ஏதாவது சொன்னால் நீங்கள் யாருக்காவும் தலைகுனிய வேண்டாம். இதுதான் வாய்ப்பு என்று அவர்கள் உங்களை அவமானப்படுத்த நினைப்பார்கள். இந்த ஆடியோவை மற்றவர்களிடம் காட்டிடுங்க. என்னோட முடிவுக்கு என்னுடைய திருமண வாழ்க்கைத்தான் காரணம். என் கணவரும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை அனுபவிச்சுட்டே. போதும் இந்த லைஃப் எனக்கு வேணாம். அவங்க மாறமாட்டாங்க. என்னோட இந்த முடிவிற்கு கவின், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி தான் காரணம். என்னுடைய கல்யாண வாழ்க்கையே மோசமா போய்டுச்சு. என்னை மன்னிச்சுடுங்க அப்பா.. என்னை மன்னிச்சுடுங்க அம்மா..” என கண்ணீர் மல்க பேசியிருந்தார். இந்த ஆடியோவை வைத்து அவருக்கு மாமியார் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரின் தாய், தந்தை ஆகிய மூவர் மீது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Tags :
Advertisement