“2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை இப்போதும் உள்ளது” - அண்ணாமலை பேட்டி!
2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்று ஓவர் கான்ஃபிடன்டில் இப்போதும் இருப்பதாகவும், ஒரு தலைவர் அப்படித்தான் இலக்கை வைத்து பணியாற்ற வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
18வது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானபின் சென்னையில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“பாஜக தேசிய அளவில் பெரிய சரித்திரம் படைத்து நேருவுக்கு பின் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். தொடர்ந்து ஆட்சி கட்டிலில் அமர்வது கடினம். அதை பாஜக செய்துள்ளது. இலக்கு வைத்து வேலை செய்தோம். நிறைய மாநிலங்களில் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகியுள்ளது. பிரதமர் மோடி எந்த அளவிற்கு பாஜக தொண்டர்கள் உழைக்கிறீர்களோ அதைவிட கூடுதலாக நான் உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் வறுமை என்பது கடந்த கால பேச்சாக மட்டும் இருக்கும். அதற்காக உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பதில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது. அதை அடைய முடியவில்லை என்பது வருத்தமே. அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பில் வெற்றி வேட்பாளர்கள் வருவார்கள். இன்னும் கடினமாக உழைப்போம். எந்த இடத்தில் தவறு என, அடுத்த ஒரு வாரத்தில் பரிசீலனை செய்து இன்னும் எப்படி சிறப்பாக செய்வது என்று யோசித்து செயல்படுவோம்.
அடுத்து எந்த கட்சியை மக்கள் விரும்பி இருக்கிறார்கள் என்பதை தீர்ப்பில் மக்கள் சொல்லி இருக்கிறார்கள். பாஜக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்கள். 40க்கு 40 தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது ஏற்றுக்கொள்கிறோம். தமிழகத்தில் ஒரு விஷயத்தை பெருமையாக பதிவு செய்ய நினைக்கிறேன். கோயம்புத்தூரில் ஒரு வேட்பாளராக நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை நான் பெற்றிருப்பது பணம் கொடுக்காமல் பெற்றது.
எங்கள் பணி இன்னும் கடுமையான பணி என்பதை புரிந்து கொள்கிறோம். தமிழகத்தில் பண அரசிலைத் தாண்டி தேசியத்தை கொண்டு வர இன்னும் உழைக்க வேண்டும். இன்னொரு கட்சி செய்யக்கூடிய தவறுகளை நாங்கள் செய்ய விரும்பவில்லை. 2026 இல் நேர்மையான அரசியலை முன்னெடுப்போம். தமிழ்நாட்டில் முதன்முதலாக பல பகுதிகளில் பாஜக வளர்ந்துள்ளது.
முதன்முதலாக திராவிட கட்சிகள் தோளில் இல்லாமல் தனித்து நின்று பெரிய அளவில் ஓட்டு பெற்றோம். முதன்முதலாக பெரிய தலைவர்கள் நிற்கும் தேர்தலை பார்த்துள்ளோம். நாங்கள் செல்லும் பாதை சரியான பாதை என்று தீர்ப்பின் மூலம் தெரிகிறது. தொடர்ந்து இந்த பாதையில் பயணிப்போம். போகும் வேகத்தை குறைக்க வேண்டியதில்லை என்று மக்கள் சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் தோல்வி என்று நாங்கள் பார்க்கவில்லை.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்று ஓவர் கான்ஃபிடன்டில் நான் இப்போதும் உள்ளேன். ஒரு தலைவர் அப்படித்தான் இலக்கை வைத்து பணியாற்ற வேண்டும். தென் மாநிலத்தில் நேர்மையான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், கொங்கு கட்சி இத்தனை கட்சிகள் சேர்ந்து பெற்ற எம்பிக்களை விட பாஜக அதிக எம்பிக்களை பெற்றுள்ளது.
கொரோனா பெருந்துறைக்குப் பிறகு யாரும் ஆட்சியை தக்க வைக்கவில்லை. ஆனால் பாஜக ஆட்சி தக்கவைத்தது. ராஜஸ்தானில் 11 இடங்களை விட்டுக் கொடுத்துள்ளோம். மும்பை, உத்திரப்பிரதேசத்திலும் வாக்குகள் குறைந்துள்ளது. இவை அனைத்தையும் ஆராய்வோம். ஒரிசாவில் 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் ஆட்சியில் இருந்தார். தற்பொழுது பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்துள்ளது. பொறுமையாக இருக்க வேண்டும். பணியை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை இதன் மூலம் கற்றுக் கொள்கிறோம்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.