கூட்டணி ஆட்சி என்பது கிடையாது - எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்!
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார்.
அதன்படி கடந்த மூன்று நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கடலூர்,பண்ருட்டி, நெய்வேலி,வடலூர்,விருதாச்சலம்,திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து இன்று சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட இடங்களில் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக சிதம்பரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் விவசாய பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டத்தில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அதன்படி ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி உங்களுடன் ஸ்டாலின் என விளம்பரப்படுத்துகின்றார். 2026 தேர்தலில் மக்களை ஏமாற்ற விளம்பர மாடல் அரசு என்று உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலில். எங்கள் கூட்டணி பாரதிய ஜனதா கட்சி மேலும் பல கட்சிகளும் வரும் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி யாருடன் கூட்டணி வைக்க மாட்டார் என ஸ்டாலின் நினைத்திருந்தார். பாஜக உடன் கூட்டணி வைத்திருப்பது அவருக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களுடன் ஸ்டாலின் என பெறப்பட்ட ஒரு கோடி 5 லட்சம் மனுக்கள் எங்கு சென்றன அதற்கு தீர்வு காணப்பட்டதா? தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா என கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்த எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.