For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடைப்பயணத்துக்கு தடை இல்லை - அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

பா.ம.க.வில் நிலவிவரும் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் நடைபயணத் தடை குறித்த குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.
09:18 AM Jul 26, 2025 IST | Web Editor
பா.ம.க.வில் நிலவிவரும் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் நடைபயணத் தடை குறித்த குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.
நடைப்பயணத்துக்கு தடை இல்லை   அன்புமணி ராமதாஸ் விளக்கம்
Advertisement

Advertisement

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த விரிசலின் வெளிப்பாடாக, டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று தனது 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம்' என்ற பெயரில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கினார். அடுத்த 100 நாட்களுக்கு முக்கிய தொகுதிகளுக்குச் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், டாக்டர் அன்புமணி ராமதாஸின் இந்தப் பயணத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நான்தான் பா.ம.க. நிறுவனர். அன்புமணி இந்தப் பயணத்திற்கு என்னிடம் எந்தவித அனுமதியையும் பெறவில்லை. அவருடைய நடைபயணம் பா.ம.க.வில் மேலும் குழப்பத்தை உண்டாக்கி, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கும் வழிவகுக்கும். எனவே அவருடைய இந்தப் பயணத்திற்கு போலீசார் அனுமதி வழங்கக் கூடாது. தடை விதிக்க வேண்டும் என்று கூறி, காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) சங்கர் ஜிவாலுக்கு டாக்டர் ராமதாஸ் ஒரு மனு அனுப்பியிருந்தார்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டி, டாக்டர் அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்குத் தடை விதித்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.

நடைபயணத்திற்கு காவல்துறை தடை விதித்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டி.ஜி.பி.யின் சுற்றறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், நடைபயணத்திற்குத் தடையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் ரத்து என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம் என்றே டி.ஜி.பி. அறிக்கையில் உள்ளது.

நடைபயணத்திற்கு அனுமதி ரத்து என டி.ஜி.பி. குறிப்பிடவில்லை, என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பா.ம.க.வில் நிலவிவரும் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் நடைபயணத் தடை குறித்த குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.

Tags :
Advertisement