”நாடு முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது”- எம்.பி.சுதா பேட்டி!
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா இன்று டெல்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து சாணக்கியபுரி காவல் நிலையத்தில் எம்.பி. சுதா புகார் அளித்துள்ளார். டெல்லியில் உயர் பாதுகாப்பு மண்டலமாக விளங்கும் பகுதியில் சுதா எம்.பியிடம் செயின் பறிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக எம்பி சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
”டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கக்கூடிய தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் காலை நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் வந்து தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக எந்த பதட்டமும் இல்லாமல் சென்றார். இந்த சம்பவம் நடைபெற்ற போது அந்த பகுதியில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் இல்லை. சற்று நேரத்திற்கு பின்பாக அந்த பகுதியில் இருந்து பணியில் வந்த போலீசாரிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக தெரிவித்தோம். ஆனால் அவர்கள் நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று மட்டுமே தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வளவு பாதுகாப்பான தூதரகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் இதுபோன்ற ஒரு செயின் பறிப்பு சம்பவம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நடைபெற்றிருக்கிறது என்றால் இந்த நாட்டில் பிற பெண்கள் இதுபோன்று செல்லும்போது அவர்களுக்கு எதிரான கொடுமை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
காவல்துறையினரும் அலட்சிய போக்கு உடனே நடந்து கொண்டனர் என்பது வேதனைக்குரியது. இந்த சம்பவம் தொடர்பாக மக்களை சபாநாயகர் இடம் புகார் அளித்துள்ளோம். மேலும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம். நாடு முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. தலைநகர் டெல்லியில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் இருந்த போதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது”
எனத் தெரிவித்தார்