“காவல்துறை இனி தூங்கக்கூடாது, வித விதமான போராட்டம் நடக்கும்” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி முறைகேடு நடந்ததாக சமீபத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து பாஜகவினர் திமுக அரசுக்கு எதிராக டாஸ்மாக் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்து, இன்று(மார்ச்.17) போராட்டத்திற்கு வந்தனர். அப்போது காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர். இது குறித்து அண்ணாமலை தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு நாள் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டாஸ்மாக் கடையை மூடி, பூட்டுப் போடப்போகிறோம். இரண்டு போராட்டங்களை அடுத்த 15 நாட்களுக்குள் இரண்டு இடத்தில் நடைபெறும். 22ஆம் தேதி சென்னையில் ஒரு போராட்டம் நடக்க வாய்ப்புள்ளது. அதை எங்கு என்று அறிவிக்கப்போவதில்லை. காவல்துறை பாஜகவுக்கு மரியாதை கொடுக்காதவரை பாஜக காவல்துறைக்கு மரியாதை கொடுக்காது.
அறவழிப்போராட்டதிற்கு முடிவில்லை என்று ஆனப் பிறகு, காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துள்ளோம். அடுத்த இரண்டு போராட்டமும் கட்டாயமாக நடக்கும். காவல்துறை முடிந்தால் தடுத்து பார்க்கட்டும். தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையினருக்கு இன்றையிலிருந்து தூக்கம் இருக்க கூடாது. பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக்கூடாது. தமிழ்நாட்டில் வித விதமான போராட்டம் மே மாதம் வரை நடக்கும். இனி எல்லா ஆர்பாட்டமும் தேதி குறிப்பிடாமல்தான் நடக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் B டீம் தான் விஜய்; திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆரம்பித்த சீக்ரட் ப்ராஜெக்ட் தான் தமிழக வெற்றிக் கழகம்”
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.