மூன்றாவது மாடியில் பெயிண்ட் அடித்த நபர்... நொடிப்பொழுதில் நடந்த சம்பவம்... சென்னையில் அதிர்ச்சி!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜும்மா (35). இவர் சென்னை நொளம்பூர் நான்காவது மெயின் ரோடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு மாடி கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து வந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்தார். உடன் பணிபுரிந்த நபர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.
நொளம்பூர் காவல்துறையினர் கட்டட உரிமையாளர் வரதன் மற்றும் மேஸ்திரி ஆதிகேசவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதற்கிடையே உயிரிழந்த ஜும்மாவின் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிந்த பணியாளர்கள் நொளம்பூர் காவல் நிலையத்தில் கூடி மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போலீசார் இச்சவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.