"காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல" - செல்வப்பெருந்தகை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார். இக்கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரின் நகைகள் மாயமானதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காவல்நிலையத்தில் நடந்த தொடர் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருப்புவனம் காவல்துறையினர் அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது, காவலாளி அஜித் குமார் இறந்து விட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். காவலாளி அஜித் குமாரின் உறவினர்கள் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால்தான் இறப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். சமீப காலமாக, லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனையளிக்கிறது.
காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல; அவர்களின் செயல் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. வரும்காலங்களில் இதுபோன்ற துர்ச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளவேண்டும். இவ்விஷயம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்"
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.