சாலை விபத்தில் மகன் உயிரிழந்ததாக நாடகமாடிய தந்தை... பின்னணி என்ன?
டெல்லியின் நஜாஃப்கரைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். இவர் கடந்த மார்ச் 5 ஆம் தேதி, காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது மகன் ககனுக்கு சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இருப்பினும் அவர் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கவில்லை.
பின்னர் மார்ச் 11 ஆம் தேதி போலீசார் குமாரைத் தொடர்பு கொண்டபோது, ககன் மார்ச் 6 ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாக குமார் தெரிவித்தார். மேலும், உத்தரபிரதேசத்தின் ஹாபூரில் உள்ள கர்கங்காவில் ககனின் உடலை உடற்கூராய்வு செய்யாமலும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமலும் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த கோர விபத்து குறித்து வழக்கைப் பதிவு செய்வதில் அலட்சியம் காட்டியதாக காவல்துறை அதிகாரிகள் மீது குமார் புகார் அளித்தார். விபத்துக்கும், அதிகாரிகள் மீதான புகாருக்கும் இடையில் முரண்பாடு இருப்பதை மற்ற போலீசார் கவனித்தனர். பின்னர், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில், போலீசாருக்கு அதிர்ச்சி தரும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த சிசிடிவி காட்சியில், குமாரின் மகன் ககனும், மற்றொரு நபரும் விபத்து நடந்தது போன்று செட்டப் செய்தது தெரியவந்தது.
போலீசார் இதுகுறித்து குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், மகன் இறந்துவிட்டதாக பொய்யான புகாரை அளித்ததாக குமார் ஒப்புக்கொண்டார். விபத்து நடந்தது போன்று செட்டப் செய்ய வழக்கறிஞர் ஒருவர் உதவி செய்திருக்கிறார். ககனின் தலையில் மருத்துவர் ஒருவர் பெரிய கட்டை போட்டிருக்கிறார். விபத்து ஏற்பட்டது உண்மை என்பதை நிரூபிக்க இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறினார். ககன் இறந்ததாக கூறி அவரது பெயரில் இருக்கும் ரூ.2 கோடி காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காகவே இவ்வாறு பொய்யான புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். குமார், வழக்கறிஞர் மன்மோகன் மற்றும் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.