"ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழ்நாடு சட்டசபையின் 4-ம் நாள் கூட்டம் இன்று காலை கூடியது. கூட்டத்தில் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 25 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். அப்போது பேசியவர்,
"குழந்தைகள் இறந்து 25 நாட்கள் கழித்து தான் தமிழ்நாட்டிற்கு தகவல் வந்தது. 25 குழந்தைகள் உயிரிழந்த செய்தி கிடைத்ததும் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து 2 நாட்களில் சர்ச்சைக்குரிய மருத்து தயாரிப்பு நிறுத்தப்பட்டு, நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் மருந்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவது ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் இருமல் மருந்து பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் இருமல் மருந்து (Coldrif) அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தவில்லை.
ஆனால் சர்ச்சைக்குரிய இருமல் மருந்து நல்லது என்று மத்திய பிரதேச அரசு சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் தான் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை. 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.