திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று (டிச.3) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது விண்ணைப் பிளக்கும் அரோகரா முழக்கங்களுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்ச கணக்கான பக்தர்கள் மகா தீபத்தை தரிசித்தனர்.
5 அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்தக் கொப்பரையானது நேற்று அதிகாலை கோயிலில் சிறப்பு பூஜைசெய்யப்பட்டு, பின்னர் மலை உச்சிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. மேலும், தீபம் ஏற்றுவதற்கு ஆயிரம் மீட்டர் அளவிலான திரியும், தீபம் எரிவதற்கு 3,000 கிலோ நெய்யும் பயன்படுத்தப்பட்டது. இவையனைத்தும் இன்று அதிகாலை மலை உச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 9 நாட்களாக காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவு பஞ்ச மூர்த்திகளும் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தனர். விழாவின் 10-ம் நாளானஅண்ணாமலையார் கோயில் சுவாமி சந்நிதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.