“சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் சரணடையும் பழக்கம் உண்டு” - ராகுல் காந்தி விமர்சனம்!
மத்திய பிரதேசதம் போபாலில் இன்று(ஜூன்.03) காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சி நிர்வாகிகளிடையே கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது, “டிரம்ப் அங்கிருந்து ஒரு சைகை காட்டினார். அவர்(டிரம்ப்) தனது மொபைலில், மோடி நீங்க இப்போ என்ன செய்கிறீர்கள் என்றால், சரணடையுங்கள் என்றார். அதற்கு பிரதமர் மோடியும் இணங்கினார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு சின்னதாக அழுத்தம் கொடுத்தால் கூட பயந்து ஓடிவிடுவார்கள்.
மொபைல் ஃபோன்கள் இல்லாத காலத்தை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். 1971 போரின்போது ஏழாவது கடற்படை வந்தது. ஆயுதங்கள் வந்தன. ஒரு விமானம் தாங்கி கப்பல் வந்தது. ஆனால் இந்திரா காந்தி செய்ய வேண்டியதைச் செய்தார். இதான் வித்தியாசம். அவர்கள்( பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்) சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே சரணடையும் பழக்கம் உண்டு. கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் சரணடைவார்கள். இது தான் அவர்களின் குணம். ஆனால், காங்கிரஸ் கட்சி சரணடையாது. காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் படேல் ஆகியோர் சரணடைந்தவர்கள் அல்ல. அவர்கள் வல்லரசுகளுக்கு எதிரான போராளிகள்” இவ்வாறு அவர் கூறினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்குள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. இதை கடந்த மே.10 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக ரீதியாக முடித்து வைத்ததாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.