மாநிலங்களவை தேர்தல் | அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்!
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதன் அடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. வரும் ஜூன் 9-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். முதல் நாளில், 2 சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர். அதன்பின் கடந்த இரு தினங்களாக யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் நாளை (ஜூன் 6-) வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் முன்னிலையில்,
கழக மாநிலங்களவை வேட்பாளர்கள் திரு. @IInbadurai, திரு. ம. தனபால் ஆகியோர் நாளை (06.06.2025- வெள்ளிக்கிழமை) நண்பகல் 12:45 மணிக்கு வேட்புமனு தாக்கல்.
-தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/sGyL176uwO
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) June 5, 2025
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19.6.2025 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கட்சிப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி முன்னிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கட்சி வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் I.S. இன்பதுரை, Ex. MLA., செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் ம. தனபால், Ex. MLA., ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களை, நாளை (6.6.2025 - வெள்ளிக் கிழமை) நண்பகல் 12.45 மணிக்கு, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்ய உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கட்சிப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியின்ன் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.