"ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்" - மத்திய அமைச்சர் #Jaishankar குற்றச்சாட்டு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டதொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல்நாள் கூட்டத்தில் உரையாற்றினார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நடைபெற்றது.
இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியபோது, அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது,
"மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பியுள்ளார். இந்த தவறான தகவல்கள், நம் நாட்டின் சர்வதேச மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் என எச்சரிக்கிறேன். நான், அப்போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்திக்க சென்றிருந்தேன். மேலும், அங்கு நடைபெற்ற இந்திய தூதரகங்களின் தலைமை அதிகாரிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன்.
அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னைச் சந்தித்தார். எந்த இடத்திலும் பிரதமருக்கான அழைப்பிதழ் பற்றி பேசப்படவில்லை. நமது பிரதமர் இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதுபோன்ற நிகழ்வுகளில் இந்தியா சார்பில் சிறப்பு தூதர்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம். ராகுல் காந்தியின் இந்த பொய்கள் அரசியல் நோக்கத்திற்காக இருக்கலாம். ஆனால் அவை வெளிநாட்டில் நமது மரியாதையைக் குலைக்கும்"
இவ்வாறு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.