அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவர் செங்கோட்டையின். இவர் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என போர்கொடி தூக்கினார். இது அதிமுக வட்டாரத்தில் புயலை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையனை நீக்குவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். மேலும் அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அதிமுகவிலிருந்து தன்னை நீக்கிவிட்டால் மகிழ்ச்சி என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும். அவர்களுடன் ஒன்றிணைந்து கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த K.A. செங்கோட்டையன், M.L.A., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
  
  
  
  
  
 