27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு... கடலூரில் பரபரப்பு!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் வல்லம்படுகை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 பவுன் நகை மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருடிய நகை மற்றும் லேப்டாட்பை சித்தாலப்பாடி அருகே உள்ள முட்புதரில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் காவலர்கள் ஞானப்பிரகாசம் ஆகியோர் இன்று (மார்ச்.20) காலை சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்களுடன் குற்றவளி ஸ்டீபனும் சென்றிருந்தார். அங்கு நகைகளை பறிமுதல் செய்யும் போது, ஸ்டீபன் அந்த இடத்தில் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் ஞானப்பிரகாசத்தை தாக்கி தப்பி ஓட முயன்றதாக தெரிகிறது.
அப்போது ஆய்வாளர் அம்பேத்கர் குற்றவாளி ஸ்டீபனை துப்பாக்கியால் சுட்டார். இதனையடுத்து போலீசார் காயமடைந்த ஸ்டீபனை அருகே உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவலர் ஞானப்பிரகாசத்தையும் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஸ்டீபன் மீது தமிழ்நாடு முழுவதும் 27 கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.