"பாஜக விரித்த வலையில் அதிமுக மட்டுமே சிக்கியது" - திருமாவளவன் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களை வெல்வோம் என கூறியிருக்கிறார். அதற்கான செயல் திட்டங்களை அவர் வகுத்து வருகிறார். அவர் வகுக்கும் செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்தும் வகையில் கூட்டணி கட்சிகளில் ஒன்று என்ற அடிப்படையில் விசிக ஒத்துழைக்கும். இன்றும் திமுக கூட்டணிக்கு மாற்றாக ஒரு எதிர் கூட்டணி தமிழ்நாட்டில் உருவாகவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கடி தமிழ்நாடு வருகை தருகிறார். கூட்டணி உருவாக்க முயற்சிக்கிறார். பாஜக விரித்த வலையில் அதிமுக மட்டுமே சிக்கியது. வேறு எந்த கட்சியும் உடன்படவில்லை. எதிர்க்கட்சிகள் ஒற்றிணைந்து ஒரு கூட்டணி வடிவத்தை கூட பெறவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மட்டுமே ஒரு கூட்டணியாகவும், வலுவாகவும் இருக்கிறது. மேலும், வெற்றி வாய்ப்பை பெற்றுள்ள அணியாகவும் உள்ளது. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் சேர்வதும் அல்லது சேர வேண்டாம் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். ஒவ்வொரு தேர்தலின் போதும் கூடுதலான சீட்டுகளைதான் கேட்கிறோம். அந்தந்த காலத்திற்கேற்ப பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவு செய்வோம். தேமுதிக எந்த அணிக்கு செல்ல வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். திமுக கூட்டணிக்கு வரும் சூழல் உருவானால் அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொள்வார். பாமகவில் நடப்பது உட்கட்சி, குடும்ப விவகாரம்.
இதில் வலதுசாரி கட்சிகள் தலையிடுவது கவலையளிக்கிறது. அது இடதுசாரி அரசியலை முன்னெடுத்து எழுச்சி பெற்ற இயக்கம். ஆனால், இன்று வலதுசாரிகள் தலையிடும் அளவிற்கு பரிணாமம் ஏற்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. வலதுசாரிகள் தலையிடும் இயக்கங்கள் தனித்து வளர்வதில், இயங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதை கடந்த காலம் உணர்த்தி இருக்கிறது. இதனை, பாமக நிறுவனர், தலைவர் இருவரும் அறிவார்கள். நான் புதிதாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் தமிழ்நாடு, தமிழ் மக்களை தாண்டி இந்தியாவையும் காக்க களத்தில் நிற்போம். ஒவ்வொரும் தங்களை காவலர்கள் என்று சொல்லிக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.
எதிர்க்கட்சிகள் சொல்லி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டினோம் என்ற பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் இந்த நிலைபாட்டை எடுத்துள்ளனர். ஆனால், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலால்தான் இந்த கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலம் தாழ்ந்தி நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டாமல், ஜுலை இரண்டாவது வாரமே கூட்டுவது வரவேற்கத்தக்கது. இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் பஹல்காம் தாக்குதல், சிந்தூர் நடவடிக்கை குறித்து விரிவாக பேசுவார்கள். அதற்கு ஆளுங்கட்சி பதிலளிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்"
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.